சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அந்த முழு விவாதமும் இங்கே.

உதயநிதி பேசுகையில், “காவல்துறையின் கொள்கை விளக்கப் புத்தகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொலை, கலவரம், வழிப்பறி, பாலியல் குற்றங்கள் எல்லாம் குறைந்திருப்பதாக தரவுகளோடு கூறியிருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக நேர்மையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
இந்த அரசு அமைந்து 116 நாள்கள் ஆகிறது. இத்தனை நாள்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை குறிப்பிடலாம்.
விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் நாங்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தோம். உதாரணமாக வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கி ல் 32 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். உங்களின் 116 நாள் ஆட்சி பெண்களுக்கு பெரும் துயரை கொடுத்துவிட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 9 கொலைகள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு 10 ஆணவக்கொலைகள் நடந்திருக்கிறது. கறிக்கடையில் கூட இவ்வளவு வெட்டுக்குத்து நடப்பதில்லை.

ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரு எம்.எல்.ஏ பெயரை சொல்லி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அதில் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “அந்தப் பெண் புகார் கொடுத்ததன் பேரில் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வந்திருக்கிறது” என்றார்
தொடர்ந்து பேசிய உதயநிதி, “காவல்துறை மீதான விவாதத்தில் நான் உரையாற்றுகிறேன். அந்தத் துறை அமைச்சரான முதல்வர் பதில் சொல்லாமல், நீர்வளத்துறை அமைச்சர் பதில் சொல்கிறாரே? தூத்துக்குடி, ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆர்.கே.நகர், சேலம் தவெக நிர்வாகிகளின் மீதும் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன் முதல்வர் விஜய் காவல் மரணங்களுக்கு எதிராக பேசினார். ஸாரி வேண்டாம்…நீதி வேண்டாம் என்றார். ஆனால், இந்த அரசு அமைந்த பிறகு 8 காவல் மரணங்கள் நடந்திருக்கிறது. குறைந்தபட்சமாக முதல்வர் ஸாரி கூட கேட்கவில்லை.
காவல்துறையும் உளவுத்துறையும் செயலிழந்துவிட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது. ஜென் ஸி இளைஞர்களையும் அவர்களுக்கு சாதகமான கட்சியினரையும் பத்திரிகையாளர்களையும் இந்த அரசு கைது செய்கிறது. முதல்வரை வெளிப்படையாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்தப் புகாரும் பதியப்படுவதில்லை. எங்களுக்கு வந்தா ரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? பாஜக அடித்தால் வலித்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்கிற யுக்தியை ஆளுங்கட்சி பயன்படுத்துகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மெரினாவில் போராட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. உலகத்திலேயே மாணவர்களுக்கு பயந்து கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு இந்த அரசுதான். பெசண்ட் நகர் கடற்கரையில் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கவில்லை.

உயர்கல்வி சார்பாக இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என சுற்றறிக்கை கொடுக்கப்படுகிறது.
இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா?
எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவது போல ‘இவருக்கு பதில் இவர்’ பாணியில் பதில் சொல்கிறார்கள். முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாள்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன் தயாரிப்பு செய்து வரட்டும். எங்கள் மீது பழி போடாமல் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லுங்கள். இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்ற எண்ணத்தை நீக்கிவிடுங்கள். ரோல் கேமரா ஆக்சன் மோடில் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகள் சொல்லாமல் மக்களுடைய கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.
எங்களுடைய ஆட்சியில் பொறுப்பு டிஜிபி ஏன் நியமிக்கப்பட்டார் என கேள்வி கேட்கிறார்கள். எங்கள் ஆட்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுக்குப் பிறகு, டிஜிபி நியமனத்துக்காக UPSC க்கு ஒரு லிஸ்ட்டை வழங்கினோம். அந்த சமயத்தில் டிஜிபி தேர்வுக்குழுவில் யார் யார் இருக்க வேண்டுமென்பதில் அரசுக்கும் UPSCக்கும் மாற்றுக்கருத்துகள் இருந்தது. சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், டிஜிபி தேர்வில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகம் இருந்தது. அது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அதற்காக நீதிமன்றத்துக்கும் போனோம். அதனால்தான் பொறுப்பு டிஜிபியை நியமித்தோம். அது சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்ட நடவடிக்கைதான்.
திமுக ஆட்சியில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான புகார்களில் நம்பிக்கையளிக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். போக்சோ குற்றங்களை எப்படி கையாள வேண்டுமென சிறப்புத்திட்டங்கள் துறை சார்பில் என்னுடைய தலைமையிலேயே ஆய்வுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
போதைப் பொருள் ஒழிப்பில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறீர்கள். அப்படியெனில் எங்கள் ஆட்சியில் மதுவிலக்கு கலால் துறையில் பணியாற்றிய மகேஷ் குமார் அகர்வாலை எதற்காக இன்று டிஜிபியாக நியமித்தீர்கள்? எங்கள் ஆட்சியில் போதைப் பொருள் ஒழிப்பில் பணியாற்றிய அமல்ராஜை எதற்கு சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக நியமித்தீர்கள்?” என்றார்

திடீரென எழுந்த முதல்வர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை திங்கள் கிழமை கொடுக்கிறேன். நான் இங்கே இல்லையென்றாலும் உங்களின் கேள்விகள் எனக்கு வந்துவிடும். நான் பேசும்போது யாரும் எழுந்தரித்து ஓடிவிடக் கூடாது” எனக் கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.
உடனே உதயநிதி, “கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இதை சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார்” எனக் கூற…
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “முதல்வருக்கு எதை எப்போது பேச வேண்டுமென தெரியும். நீங்கள் இரண்டரை வருடம் எங்களை பேசியதால்தான் நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என எனக்குதான் தெரியும். தலைவரின் கூட்டத்துக்கு காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் அனுமதி இல்லை என்பார்கள். எல்லா பக்கமும் பேச அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதிகளிலும் வென்றிருப்போம்” என்றார்.
உடனே உதயநிதி, “தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவர்களை பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில்கூட இவர்களை விமர்சனம் செய்யவில்லை. நாங்கள் பேசியதாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எல்லா கட்சிகளைப் போலவும் இவர்களின் கூட்டத்துக்கும் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்தோம். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம்தான் அனுமதி குறித்த முடிவை எடுக்கும். அவர்களின் தலைவர் சில ஊர்களுக்குச் செல்லத்தான் செய்தார். கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றார். அங்கே தவெக வெல்லவே இல்லை. இது மெஜாரிட்டி இல்லாத அரசுதான். எங்களின் தயவால்தான் இந்த ஆட்சியே நடக்கிறது” என்றார்.

அதற்கு அமைச்சர் ஆதவ், “எங்களை பிரசாரம் செய்யவிடக் கூடாது என்பதற்காக SOP போட்டார்கள். 5000 பேருக்கு மேல் இருந்தால் 30 நாள்களுக்கு முன்பே அனுமதி கேட்கச் சொன்னார்கள். காவல்துறையை தவெகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். எங்களை பற்றி பேசாததால்தான் இங்கே இருக்கிறீர்கள். பேசியிருந்தால் வீட்டில் இருந்திருப்பீர்கள்” என்றார்.
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026
கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு: தமிழக மின்சார வாரியம்
September 7, 2026
Ira Sachs, Jordan Firstman and Diego Luna Among San Sebastian’s Film Talks Lineup
September 7, 2026
Ellen Burstyn on Being “Recognized” by Marilyn Monroe, Changing Roles for Women With ‘Alice Doesn’t Live Here Anymore’
September 7, 2026
PCB to investigate conduct and discipline of Pakistan players in England
September 7, 2026
Gary Oldman Says a James Bond Has Been Picked — and He’s Hoping It’s Jack Lowden
September 7, 2026
Miller, de Kock in South Africa squad for Australia ODIs
September 7, 2026
Kevin Pietersen makes shock England return as specialist white-ball mentor
September 7, 2026