“த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அத்தனை உயர் பலிகளும் நடந்தன. எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து அவரது அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என அப்போதே தி.மு.க அரசிடம் சொன்னேன்” என வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் அனலைக் கூட்டியிருக்கிறது.
இதையடுத்து வி.சி.க பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ரவிக்குமாரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
” ‘கரூர் உயிர் பலிகளுக்கு விஜய்தான் காரணம் என தான் எடுத்துரைத்தும் அவர் மீது வழக்குப் பதியவில்லை தி.மு.க அரசு’ என்பதையெல்லாம் திருமாவளவன் இப்போது எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் என்ன?”
“2026 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வையும் பா.ஜ.க-வையும்தான் எதிரணியாக பார்த்தது தி.மு.க. மேலும், த.வெ.க-வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வளர்த்துவிட்டுவிட வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன், த.வெ.க-வை குறைத்தும் மதிப்பிட்டு விட்டார்கள்.
த.வெ.க தலைவர் விஜய், நேரடியாக தி.மு.க ஆட்சியையும், முதல்வரையும் விமர்சித்தபோதுகூட, தி.மு.க பதில் விமர்சனம் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘கரூர் உயிர் பலிக்கு காரணமே செந்தில்பாலாஜிதான்’ என்றும் குறிவைத்து விமர்சித்தது த.வெ.க. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அன்றைய முதல்வரையும்கூட தவறாக விமர்சித்ததோடு, அதற்கும் ஒரு உள்நோக்கம் கற்பித்தனர் த.வெ.க-வினர்.
இப்படிப்பட்ட சூழலிலும்கூட தி.மு.க அரசாங்கம் இவ்விவகாரத்தில் பொறுமையைத்தான் கடைப்பிடித்தது. இது ஒரு தவறான தேர்தல் உத்தி – அரசியல் உத்தி என்பதைத்தான் எங்கள் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.
.jpeg)
அண்மையில்கூட உதயநிதி ஸ்டாலினே, ‘நம் எதிரி யார் என்பதை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோம். வெளியில் போய் எல்லாம் பிரசாரம் பண்ணினோம். ஆனால், நம் வீட்டுக்குள் பிரசாரம் செய்யாமல் விட்டுவிட்டோம்’ என பேசியிருக்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்… ‘முதன்மை எதிரியான த.வெ.க-வை நாம் விமர்சிக்காமல் விட்டுவிட்டோம்’ என்றுபதுதானே!
ஆக, தி.மு.க-வினரது குடும்பத்தினரே த.வெ.க-வுக்கு வாக்களித்துவிட்டார்கள். ஆக, இந்த உண்மை நிலையை இப்போது தி.மு.க-வினரே உணர்கிறார்கள். இதைத்தான் எங்கள் தலைவரும் பேசியிருக்கிறார்.
அதேபோல், கரூர் விவகாரத்தில் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட த.வெ.க-வினர் அண்மையில் தங்கள் விளக்கத்தைச் சொன்னார்கள். ஆனால் அப்போது, ‘இது வழக்கு விசாரணையைப் பாதிக்கும்’ எனக்கூறி தி.மு.க வழக்கு தொடுத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.”
” ‘திமுக கூட்டணி உடைந்ததற்கு தி.மு.க-வே காரணம். கூட்டணி கட்சிகளை முறையாக நடத்தவில்லை’ என திருமாவளவன் இப்போது சொல்வதற்கான காரணம் என்ன?”
“த.வெ.க ஆட்சி அமைக்க முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சிதான். ஆனாலும்கூட த.வெ.க ஆட்சியமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே ஐ.யு.எம்.எல்., கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்து கட்சியினரிடமும் வந்து ஆதரவு கேட்டது த.வெ.க-தான்.
ஆனாலும்கூட தி.மு.க ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் சிலர், ‘தி.மு.க கூட்டணி கட்சிகள் த.வெ.க கூட்டணியில் இணைந்தது துரோகம்’ என்பதுபோல் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். இன்னும் குறிப்பாக காங்கிரஸ், ஐ.யு.எம்.எல் கட்சிகளைவிடவும் வி.சி.க-வை குறிவைத்து அண்மைக்காலமாக விமர்சிக்கிறார்கள். தி.மு.க-வின் தலைவர்களும்கூட ‘அதுதான் உண்மை’ என்பதுபோல் விளக்கம் எதுவும் கொடுக்காமல், மவுனம் காத்துவருகிறார்கள்.
இந்த சூழலில், தி.மு.க கூட்டணியிலிருந்து ஏன் வெளியே வந்தோம் என்ற பின்னணியையும் காரணத்தையும் வி.சி.க சொல்லவேண்டிய தேவை எழுகிறது.”
“தேர்தலுக்கு முன்பான தி.மு.க கூட்டணி குறித்து, 4 மாதங்கள் கடந்து இப்போது பேசுவது நடப்பு அரசியல் தோல்விகளை திசை திருப்பும் செயல் என்கிறார்களே?”
“அப்படியல்ல… தேர்தலுக்கு முன்பு அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில்கூட, ‘ம.நீ.ம-வுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும். ம.தி.மு.க-வுக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்கெனவே கொடுத்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்க வேண்டும்’ என்பதுபோன்ற கருத்துகளை அன்றைக்கு கூட்டணிக்குத் தலைமை தாங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், ‘வி.சி.க-வுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுக்க வேண்டும்’ என்று எங்கள் கட்சிக்காகக்கூட நாங்கள் அதிகம் வலியுத்தாமல், கூட்டணிக் கட்சிகளின் நலனை முன்னிறுத்தி அதிகம் பேசியிருக்கிறோம்.
எனவே, இந்த விவகாரங்களை எல்லாம் எங்கள் தலைவர் ஏதோ, தருமபுரி திருமண நிகழ்ச்சியில் வந்துதான் பேசினார் என்றில்லை… தி.மு.க கூட்டணியில் இருந்தபோதிலிருந்தே நாங்கள் தொடர்ச்சியாகப் பேசிவருவதுதான். அதையேதான் இப்போதும் பேசியிருக்கிறார்.”
” ‘தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.க-வுக்கு நாம் ஆதரவு அளிப்பது, தி.மு.க-வைத் தனிமைப்படுத்துகிற ஆர்.எஸ்.எஸ்-ஸின் முயற்சியோ என்றெல்லாம்கூட நான் சந்தேகப்பட்டேன்’ என்றும் திருமா பேசியிருக்கிறார். ஆனால், இப்போது அதுதானே நடந்திருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டு, தி.மு.க வெர்சஸ் த.வெ.க அரசியல்தானே இங்கே கூர்மைப்படுத்தப்பட்டு வருகிறது?”
“பா.ஜ.க எதிர்ப்பு மட்டுப்பட்டுவிட்டது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? வி.சி.க., இடதுசாரிகள், காங்கிரஸ், ஐ.யு.எம்.எல்., தி.மு.க என அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.க எதிர்ப்பைத்தானே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியான த.வெ.க சட்டமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான தீர்மானங்களை இயற்றிக்கொண்டிருக்கிறது.
ஆக, பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான வடிவத்திலும் தன்மையிலும் சில வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக ‘சனாதன எதிர்ப்பு’ என்று வி.சி.க தொடர்ந்து சொல்லிவருகிறது. அதை காங்கிரஸாரோ, இடதுசாரிகளோ சொல்கிறார்களா… இல்லையே. அதற்காக அவர்கள் பா.ஜ.க-வை எதிர்க்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா?”
“சட்ட சபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ, ‘அவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதி கிடையாது’ என்ற மரபு இருக்கிறது. அந்த வகையில் அன்றைய தினம் சபாநாயகரே, அமித் ஷா பெயரை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அமைச்சர் சொல்லி நீக்கியிருக்கிறார்.”
“மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கிடைக்காததால்தான் அ.தி.மு.க ஆதரவை த.வெ.க புறந்தள்ளிவிட்டது என்பதுதான் இதன் பின்னணியிலுள்ள உண்மை என்கிறார்களே?”
“அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைந்த விவகாரம் தொடர்பான வழக்கில் இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கிவிட்டது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல… நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கியதுதான். அப்படி இருந்தால் மட்டுமே கட்சித்தாவல் தடைச்சட்டம் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாயாது. ஆனால், இன்றைய நிலையில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆக, அ.தி.மு.க-விடம் ஆதரவு கேட்டால் அவரிடம்தான் கேட்கவேண்டும். அப்படி எந்த ஆதரவையும் த.வெ.க கேட்கவில்லை. அடுத்து, தென் மாநிலங்களில் காங்கிரஸ் வலு பெற்று வருவதை பா.ஜ.க விரும்பவில்லை. இந்தச் சூழலிலும்கூட, காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொண்டதோடு அவர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கு தருகிறது த.வெ.க. இதனால் பா.ஜ.க-வின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்திருந்தும்கூட மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்திருக்கிறது த.வெ.க. ஆக, மதச்சார்பற்ற கூட்டணியில் த.வெ.க உறுதியாக இருக்கிறது என்பதற்கு இது மிகப்பெரிய இன்டிகேட்டர்!”
“உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியா அல்லது சமூக அநீதியா?”
“உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு சமூக நீதியல்ல… அது சமூக அநீதி எனக்கூறி முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கடைசிவரையிலும் கடுமையாக எதிர்த்தது வி.சி.க-தான். இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கிறோம்.”
“அப்படியென்றால், ‘உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என பா.ஜ.க-வும் இன்றைக்கு சமூக நீதி பேசுகிறது’ என்கிறாரே திருமாவளவன்?”
“அது பேச்சுவாக்கில் அவர் சொன்னது. அவர் பேசிய முழு வீடியோவையும் வெட்டி, ஒட்டி வெளிவருகிற வீடியோக்களைப் பார்த்தால் இப்படித் தவறாகத்தான் பொருள்படும். 10% இட ஒதுக்கீட்டை சமூக நீதி என்று பா.ஜ.க-தான் சொல்கிறது. வி.சி.க எங்கேயும் சொல்லவில்லை.
சமூக நீதி என்ற பெயரில், மதச் சார்புடன் அவர்கள் இதுபோன்ற விஷயங்களைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். எனவே, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைச் சொல்லும்போதுதான் அது பா.ஜ.க-வுக்கு எதிரான அணி என்பது புலப்படும். அதனால்தான் த.வெ.க தலைமையிலான கூட்டணியின் பெயரைக்கூட, ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி என பெயர் மாற்றம் செய்யவேண்டும்’ என்று எங்கள் தலைவர் கூறி, அப்படியே பெயர் மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது!”
அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு!
September 18, 2026
ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி
September 18, 2026
காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு!
September 18, 2026
சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்!
September 18, 2026
சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்!
September 18, 2026
அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்!
September 18, 2026
India, Nepal seek to ease trade, transit bottlenecks as commerce recovers
September 19, 2026
Lockheed Martin F-35 Lightning II: What the $24.3 billion US-Saudi deal means for the Middle East
September 19, 2026
Pakistan suicide attack: 16 killed, including 5 police personnel, as explosives-laden vehicle hits Kohat police facility
September 19, 2026
SC stays high court order striking down provision on income tax reassessment process
September 19, 2026
‘Totally unacceptable to us’: India condemns Houthi attacks, flags Red Sea security risks
September 19, 2026
iPhone langar announced in Chandigarh: 10 lucky people among 1,000 to get iPhone 17 and above, here's the only condition
September 19, 2026