விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.
இந்தச் சூழலில், போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போதிய பேருந்து வசதிகள் செய்துதருவதில் போக்குவரத்துத் துறைக்கு என்னதான் பிரச்னை?”
“போக்குவரத்துத் துறைக்கு எந்த பிரச்னையும் இல்லை… மக்களுக்கும் பிரச்னை இல்லை. ஏனெனில், போதுமான எண்ணிக்கைக்கும் அதிகமாகவே பேருந்து வசதியை துறை சார்பில் செய்துகொடுத்திருந்தோம்.
ஆனாலும் ஆங்காங்கே நடைமுறையில் ஏற்பட்ட சின்னச்சின்ன பிரச்னைகளைப் பூதாகரப்படுத்தி எதிர்த்தரப்பினர் பொய்யான வீடியோக்களைப் பரப்பி வருகின்றனர்.
‘தமிழ்நாடு பீகாராக மாறிவிட்டதா…?’ என்ற தலைப்பில் பஸ் மீது பயணிகள் அமர்ந்து செல்வதுபோன்று கர்நாடகாவிலுள்ள வீடியோ ஒன்றை பரப்பி அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைத்தனர். அதேபோல் பெண் ஒருவர், ‘போதிய பேருந்து வசதி இல்லை’ எனக் கூறுவதான பழைய வீடியோ ஒன்றைப் பரப்பினார்கள்.
ஆனால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு மட்டுமே நாங்கள் கூடுதலாக 40 பேருந்துகளை இயக்கியிருக்கிறோம். இது குறித்தான எங்கள் தரப்பு விளக்க செய்தியை நாங்கள் வெளியிட்டதும், அந்தப் பெண்ணின் வீடியோவையே இணையத்திலிருந்து நீக்கிவிட்டனர். இதேபோல், அரசுப் பேருந்துக்கு ஆன்லைனில் பதிவு செய்தால், அதிக காசு வாங்குவதாகவும் ஒரு பொய்ச் செய்தி வெளியானது.
இதுபோன்ற பொய்யான செய்திகளால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்களே தவிர… உண்மையில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படவில்லை!”
” ‘அரசுப் பேருந்தில் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையே கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டதோடு, அதுகுறித்து விளக்கமும் கொடுக்கவில்லை’ என்றெல்லாம் பாதிக்கப்பட்ட பயணிகளே பேசியிருப்பதான செய்திகள் வெளியானதே?”
“நீங்கள் சொல்வதுபோல், ஏற்கெனவே முன்பதிவு செய்துவைத்திருந்த டிக்கெட்டுகளை அரசுப் போக்குவரத்துக் கழகமே தன்னிச்சையாக ரத்து செய்துவிட்டதாக ஒரு தம்பி புகார் தெரிவித்திருந்தார்தான். ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்தபோதுதான், சம்பந்தப்பட்ட அந்தத் தம்பியே டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்ற சமயங்களில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்பதால், அந்தத் தம்பியை நேரில் அழைத்து அறிவுரை மட்டும் வழங்கியிருக்கிறோம்.”
“விழாக்காலங்களின்போது, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்களின் டிக்கெட்டுகளைக்கூட கடைசி நேரத்தில் ரத்து செய்து, கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக ஆம்னி பேருந்துகள் மீதும் தொடர் குற்றச்சாட்டு நிலவுகிறதே?”
“அதுபோன்ற ஒரு புகார் எங்களுக்கு அண்மையில் வந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரித்தபோது, ‘எங்களிடம் மொத்தம் 10 பேருந்துகள் உள்ளன. அதில் 2 பேருந்துகள் பழுதாகிவிட்டதால் அதில் பயணிக்கவிருந்த பயணிகளின் டிக்கெட் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என விளக்கம் கொடுத்தனர்.
இனிமேல் இதுபோல் கடைசி நேரத்தில் முன்பதிவை ரத்து செய்ய நேர்ந்தால், அந்தப் பயணிகள் பயணிப்பதற்கான மாற்றுப் பேருந்து வசதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே செய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால், பேருந்தின் பெர்மிட் உரிமையையே ரத்து செய்துவிடுவோம் என எச்சரித்ததோடு, இதுகுறித்து முறையாக அறிக்கையும் வெளியிட்டுள்ளோம்.”
“கடந்த முறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உங்களுடன் வாக்குவாதம் செய்த பயணியிடம் ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள்… நான் சாப்பிடவில்லை’ என நீங்கள் திரும்பத் திரும்பக் கூறியிருந்த வீடியோ வைரலாகிவிட்டது. எனவேதான் இந்த முறை அமைச்சர் நேரடி விசிட் செய்யவில்லை என்கிறார்களே?”
“செய்திகளில் என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்வார்கள். அதிகாலை 3 மணிக்கே எழுந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு என ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்துவருகிறேன். ஆனால், இதெல்லாம் செய்தியாகவில்லை.
நீங்கள் குறிப்பிடுகிற சம்பவத்தில், அந்தத் தம்பி நிதானத்தில் இல்லாமல் இருந்தான். அதை நாசூக்காக சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. அந்தத் தம்பியின் கையை போலீஸ் பிடித்தபோதுகூட, அதை நான் தடுத்து அனுப்பிவைத்தேன். அப்போதும்கூட ‘அரசுப் பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக’ எந்த வழக்கும் அந்தத் தம்பி மீது பதியப்படவில்லை.

இதுமட்டுமல்ல… அன்றைய தினம் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில், முன்பதிவு செய்யாத வயதான பயணிகள் ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்க மறுத்தனர். அவர்களை என்ன செய்வது? நீங்களே மனசாட்சியோடு சொல்லுங்கள். ஆனால் அவர்களுக்கும்கூட மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்துகொடுத்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தோம்.”
“கடந்த ஆட்சியில், விடுமுறை தினங்களுக்கே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இப்போது விழாக்காலங்களின்போதுகூட உரிய எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்கிறார்களே?”
“சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல், இத்தனை லட்சம் பேர் எப்படி ஊர் சென்று திரும்பியிருக்க முடியும்? விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மட்டும் எவ்வளவு மக்கள் எந்தெந்த ஊர்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ற வகையில் பேருந்துகளின் எண்ணிக்கையை முறைப்படுத்தி பயணிகள் சென்னை திரும்புவதற்கான உரிய வசதிகளை செய்துமுடித்தோம். அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல், மக்கள் ஊர் திரும்ப முடிந்திருக்கிறது. நீங்களே வேண்டுமானாலும் பயணிகளைக் கேட்டுப்பாருங்கள்!”
“ஆம்னி பேருந்துகளின் விழாக்கால கட்டணக் கொள்ளை இந்த ஆட்சியிலும் தொடர்கிறதுதானே… அதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?”
“தொடர்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருசிலர் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததைத்தொடர்ந்து, உரிய விசாரணை செய்து விதிகளை மீறிய 6 பேருந்துகளை பறிமுதல் செய்திருக்கிறோம். இன்னும் சிலருக்கு அபராதம் விதித்திருக்கிறோம். விசாரணையின்போது, ‘எங்கள் சங்கத்தில் இல்லாத உறுப்பினர்கள்தான் இதுபோல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்’ என தனியார் பேருந்து சங்கத்தினர் சொல்கிறார்கள்.
இந்த பிரச்னை அடுத்து வரவிருக்கிற ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களிலும் தொடரக்கூடாது. எனவே தனியார் பேருந்து சங்கத்தினரை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விதிமுறைகளை நெறிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.”
"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
September 20, 2026
தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி
September 20, 2026
`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! – என்ன நடந்தது?
September 20, 2026
“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்…”- அன்புமணி காட்டம்!
September 20, 2026
தவெக: “ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு
September 20, 2026
'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்
September 20, 2026
அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் சிங்கமாகவும், வெளிநாட்டில் பூனையாகவும் இருக்க கூடாது- சந்தீப்
September 20, 2026
Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது
September 20, 2026
"ஐபிஎல்-இல் கூட வாய்ப்பு இல்லாதவருக்கு இந்திய அணி தொப்பியை கொடுப்பீங்களா?" ஸ்ரீகாந்த் ஆவேசம்
September 20, 2026
சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில்
September 20, 2026
ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன?
September 20, 2026
49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா
September 20, 2026