கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசை ஆட்டம் காண வைத்தது.

அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50,000 என உடனடி நிவாரணத் தொகையை அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின். அத்துடன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அந்த ஆணையம் இன்றைய சட்டப்பேரவையில் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

அதிகாரிகளின் அலட்சியம், அவர்கள் மீது விசாரணை நடத்துவது என பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கும் அந்த ஆணையம், கள் விற்பனை குறித்தும் பரிந்துரைத்திருக்கிறது. அதில், `அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். அதை உடனே செய்ய முடியாவிட்டாலும், படிப்படியாக அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

மேலும், கள் இறக்குவது, கள் விற்பனை செய்வதற்கான உரிமம் தருவதுடன், அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவை குறித்தும் அரசு பரிசீலிக்கலாம். அதேபோல டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50% குறைக்கலாம். விலை குறைப்புக்காக மது வகைகளை டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்யலாம். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 வரையிலும் டாஸ்மாக் வணிக நேரத்தை மாற்றலாம். ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகள் வழங்கலாம்’ போன்ற பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

More in TamilNews

See all 795 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *