பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், “சட்டமன்றத்தில் பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்தோ, மாநிலத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்னை குறித்தோ எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. ‘திங்கள்கிழமை வருகிறேன், யாரும் ஓடிவிட வேண்டாம்’ என்று கூறிவிட்டுச் சென்ற முதலமைச்சர், உடனடியாக அவையிலிருந்து வெளியேறிவிட்டார். மறுநாள் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. காவல்துறை மானியக் கோரிக்கை குறித்தும் பேசவில்லை. தமிழகத்தில் சுமார் 160 பாலியல் வன்கொடுமைகளும், 200-க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடந்துள்ளன. தவெக பொறுப்பாளர்களே நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் சென்று ‘எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, காப்பாற்றுங்கள்’ என்று பாதுகாப்பு கோரியும் பாதுகாப்பு வழங்கப்படாத நிலை உள்ளது. முதலமைச்சர் சட்டப்பேரவையில் அமைதியாக, கொள்கை ரீதியான பிரச்னைகளைப் பேசுவதற்கு மாறாக, ஒரு வில்லன் கதாபாத்திரத்தைப் போலப் பேசுகிறார். காவல்துறையினருக்குச் செய்த உதவிகள், ஒதுக்கப்பட்ட நிதி, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், கொலைகளைக் கட்டுப்படுத்திய தரவுகள் குறித்து அவர் எதுவுமே பேசவில்லை.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வின் குதிரை பேரத்தால் கட்சித் தாவி, மீண்டும் அதே நபர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் தேவையற்றது. இதனால் கட்சிகளுக்கும், அரசுக்கும் வீண் செலவு. இத்தேர்தல் ஏன் வந்தது என்பது குறித்து மதுராந்தகம், தாராபுரம் பகுதி வாக்காளர்கள் கேள்வி கேட்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு பா.ஜ.க முழுமையாகப் பணியாற்றும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, குயின் மேரிஸ் கல்லூரி நிலத்தில் கர்நாடக விதான் சபா கட்டடத்தை மிஞ்சும் வகையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வரைபடம் தயாரித்து அனுமதி கோரியபோது, அன்றைய மத்திய அரசு அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் தற்போது பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டடமே ரூ.900 கோடியில் கட்டப்பட்டுள்ள நிலையில், இதைவிட அதிக மதிப்பீடு போட்டிருப்பது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்.
பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சரின் வீடு இருப்பதாகக் கூறுகிறார்கள். 20 லட்சம் சதுர அடி பரப்புக்கு கட்டடம் கட்ட குறைந்தபட்சம் 45 ஏக்கர் நிலம் தேவை, ஆனால் அங்கு 25 ஏக்கர் மட்டுமே உள்ளது. எந்தவிதத் திட்டமிடலோ, வரைபடமோ இல்லாமல் மதிப்பீடு மட்டும் போட்டுள்ளதில் உள்நோக்கம் உள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர். சுனாமி பாதிக்கப்பட்ட பகுதி என்பதோடு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எனவே, பட்டினப்பாக்கத்திற்குப் பதிலாக கிண்டியில் உள்ள 35 ஏக்கர் நிலத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அழகிய கட்டடத்தைக் கட்ட வேண்டும்.

இந்த அரசு ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய். சபாநாயகர் அவைக்கு ஜெபமாலையோடு வருகிறார், பைபிளை மேற்கோள் காட்டுகிறார். பகவத் கீதையையோ அல்லது குரானையோ அவ்வாறு மேற்கோள் காட்டியதில்லை. முதலமைச்சர் தான் ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் தவறில்லை, ஆனால் அவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் முதலமைச்சரா அல்லது அனைத்து மக்களுக்குமானவரா? நிதி அமைச்சர், சபாநாயகர், முதலமைச்சர் அனைவரும் மதச்சார்போடு நடந்துகொண்டு, சிறுபான்மை அரசு என்று கூறிக்கொண்டு மதச்சார்பற்ற அரசு எனக் கூறுவது முற்றிலும் பொய்யானது.
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உருவத்தைக் கேலி செய்யும் வகையில் சட்டமன்றத்தில் தற்போதைய முதலமைச்சர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. முன்னாள் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த ஒருவரை உருவக்கேலி செய்வது தவறானது. 40, 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளையும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்து விஷயங்களையும் பேசி நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிப் பேச வேண்டும். இதன் காரணத்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திருமாவளவனும்கூட இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இங்கெல்லாம் மாட்டுக்கறி சமைக்க கூடாது.. கனடாவில் ஓவராக சத்தம் போட்ட இந்திய பெண் அதிரடி கைது!
September 12, 2026
இந்தியாவை அவமானப்படுத்திய ஜி ஜின்பிங்? கருப்பு உறையால் மூடிய காரில் டெல்லியில் பயணித்தது ஏன்? பின்னணி
September 12, 2026
விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 66 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம் என்ன?
September 12, 2026
கனடாவில் 'பீப் பார்பிகியூ' சமைத்ததை தடுத்த இந்திய பெண்.. கடைசியில் எங்கே நிறுத்தியிருக்கு பாருங்க
September 12, 2026
திடீர்னு எப்படி ஈரானுக்கு இவ்வளவு பலம்.. அமெரிக்க ஆய்வில் வெளியான ஷாக் தகவல்! பின்னணியில் சீனா!
September 12, 2026
கணவன் வேண்டாம்.. ஓடிப்போன மனைவியை தேடிப்பிடித்து காதலனுடன் திருமணம் செய்து வைத்த நபர்
September 12, 2026