திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கேரள அரசியலிலும் தேசிய அளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. கடந்த 2020 ஜூலை மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்த தூதரக பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தூதரக பார்சல்களைத் தணிக்கையின்றி அனுப்பும் சிறப்பு அனுமதியைப் பயன்படுத்தி இந்த தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான பி.எஸ்.சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு என்.ஐ.ஏ, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கேரளத்தின் அன்றைய முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலகம் வரை தங்கம் கடத்தல் வழக்கு தொடர்புபடுத்தப்பட்டு பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 16 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு 2021-ல் ஜாமீன் பெற்ற ஸ்வப்னா சுரேஷ், பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது ஊழல் புகார்களை எழுப்பி வந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்துவரும் நிலையில், தங்கம் கடத்தலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், அதே வழக்கில் தொடர்புடைய பி.எஸ்.சரித்தை திருமணம் செய்துகொண்டார்.

ஸ்வப்னா சுரேஷ்

கொச்சி நெட்டூரில் உள்ள வடக்கு பாட்டுபுரைக்கல் பகவதி அம்மன் கோயிலில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோரது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா ஸ்ரேசும், திருவல்லம் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சரித்தும் தற்போது கொச்சியில் வசித்து வரும் நிலையில் இந்தத் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் செய்துகொண்டது குறித்து ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்

தனது ​திருமணப் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த ஸ்வப்னா சுரேஷ், ​”நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்காக மட்டும் இந்தத் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை; எங்கள் குழந்தைகள் உண்மை, மரியாதை மற்றும் நற்பண்புகளை கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழலை உருவாக்கவும், ஒன்றாக இணைந்து ஒரு புதிய வாழ்க்கையை கட்டமைக்கவுமே இணைந்திருக்கிறோம். மரணம் வரை நான் சுமங்கலியாகவே இருக்க அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

See all 777 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *