நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் நானி, “முதல்வர் விஜய் இங்கு மிகப்பெரிய நட்சத்திரம். அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பது வெறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தினால் மட்டுமே வந்தது அல்ல.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பல ஆண்டுகளாக விஜய்யை தங்கள் குடும்பத்தில் ஒருவராக உணர்வதாலும், அவர் மீது வளர்த்துக் கொண்ட நம்பிக்கையாலும் தான் இந்த ஆதரவை அளிக்கிறார்கள். இணையதளத்தில் வெளிவந்த சிறிய காணொளிகளைப் பார்த்தவரை அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நினைக்கிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றும், அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கை உண்மை என நிருபிக்கப்படும் என்றும் நம்புகிறேன். பொதுவாக தென்னிந்திய படங்கள் மற்ற மொழிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பான்-இந்தியன்’ என்று அழைக்கிறார்கள்.

ஆனால் இந்தி படங்கள் தெற்கில் வெற்றி பெற்றால் அப்படி அழைப்பதில்லை. எனவே இந்த வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. என் படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவேனே தவிர, அந்தப் பட்டத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. எனக்கு விருப்பமான வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து விரைவில் நேரடித் தமிழ் படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் தயாரிப்பேன். சமூக வலைத்தளங்களில் தமிழ் ரசிகர்கள் பதிவிடும் கருத்துகளை இப்போது உள்ள மொழிபெயர்ப்பு (Translation) வசதி மூலம் படித்துப் புரிந்து கொள்கிறேன்.

நான் இங்கு பிறந்து வளராத போதிலும், என்னை ஒரு சொந்த வீட்டுப் பையன் போல ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இயக்குநர் மாரி செல்வராஜின் தமிழ் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், நடிகை கயாடு லோஹர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வர முடியவில்லை. விரைவில் விளம்பர நிகழ்ச்சிகளில் இணையவுள்ளார். கதையை விட, அதைச் சொல்ல வரும் இயக்குநரின் நேர்மையும், சினிமா மீதான அவரது தீவிரக் காதலுமே எனக்கு முதன்மையானது. நேர்மையான மனிதர்கள் ஒரு சாதாரண கதையைக் கூட சிறந்த திரைப்படமாக மாற்றிவிடுவார்கள். அதன்பிறகே கதையையும், என் கதாபாத்திரத்தின் வித்தியாசத்தையும் பார்ப்பேன்.” என்றார்.

See all 192 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *