மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க.

”நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது” என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.

இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வந்த நிலையில், இன்று இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்பமனு அளிக்க அ.தி.மு.க தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இவ்வளவு வேகமாக இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க தலைமை தயாராவதன் பின்னணி என்ன? எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில் பேசினோம்..,

“அ.தி.மு.க இரண்டாகப் பிளவுற்று ஒரு சிலர் த.வெ.கவுக்குச் சென்று கட்சியே களேபரமாகக் காட்சியளித்தபோதுகூட தாராபுரம், பெருந்துரை இடைத்தேர்தல் வைத்தால் நாம் எளிதாக வென்றுவிடுவோம் என்று கூலாகச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

அதுமட்டுமல்ல, இடைத்தேர்தலில் நாம் ஜெயித்துவிட்டாலே கட்சியை விட்டு போகவேண்டும் என நினைப்பவர்களும் போகமாட்டார்கள், போனவர்களும் திரும்பி வந்துவிடுவார்கள் என நம்பிக்கையோடு இருந்தார்.

சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை என ஆறு தொகுதிகளும் அண்ணா தி.மு.கவின் தொகுதி.

இவ்வளவு பெரிய விஜய் அலை, தி.மு.க பணத்தை வாரி இறைத்தபோதும் நாம்தான் வெற்றிபெற்றோம். நம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுப் போன ஆறு பேரையும் தோற்கடிக்கவேண்டும் என காட்டமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அது தொடர்பான ரகசிய சர்வேக்களையும் எடுத்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார். அதுமட்டுமல்ல, போட்டியிடப்போகும் வேட்பாளர்களையும் 90 சதவிகிதம் உறுதி செய்துவிட்டார்” என்றவர்களிடம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் எனக் கேட்க,

“மதுராந்தகத்தில் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கணிதா சம்பத் இருக்கிறார். அவர் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர், 2021-ல் செய்யூரில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

கடந்தமுறை சீட்டு கொடுக்கவில்லை. கட்சியில் நன்கு அறிமுகமான நபர் என்பதால் அவருக்குக் கொடுக்கலாம் என ஒரு யோசனை இருக்கிறது.

அதேபோல ராஜ்யசபா எம்.பி, தனபாலின் மனைவி காயத்ரி பட்டியலில் இருக்கிறார். அதில், எப்படியாவது தன் மனைவிக்கு சீட்டு வாங்கிவிடவேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறார் தனபால்.

தலைமைக் கழகத்தில் மாவட்ட வாரியாக, எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்தியபோதே, தன் மனைவியோட வந்த தனபால், எப்படியும் சீட்டு வாங்கிவிடுவேன் என உறுதியாகச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, காயத்ரியும் ஆர்வமாகக் கட்சிப் பணியாற்றக்கூடியவர். அதனால் அவருக்குச் சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

அதேபோல தாராபுரம் தொகுதியில் எடுத்துக்கொண்டால் பங்க் மகேஷ் இல்லை என்றால் பானுமதி என இருவரில் ஒருவர் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

See all 795 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *