சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு கருத்து சுதந்திரத்தின் மீதான பாதுகாப்பைப் பற்றி பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில், தலைமைப் பண்பு குறித்து அவர் பகிர்ந்த ஒரு கருத்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவியது.

தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதி தங்களின் தலைவரைத்தான் மறைமுகமாக சாடுகிறார் என்கிற தொனியில் அதை எடுத்துக் கொண்டனர். இரண்டு நாட்களாக விஜய் சேதுபதியின் வரலாற்றையே தோண்டியெடுத்து அவரின் குணாதிசயத்தையும் பிம்பத்தையும் குலைக்கும் வகையில் வசைகளை வாரியிறைத்திருக்கின்றனர். விளைவு, அந்த தனியார் சேனலே விஜய் சேதுபதி பகிர்ந்த அந்த கருத்து நிகழ்ச்சியை மையப்படுத்தியது மட்டுமே என வருத்தத் தொனியில் விளக்கம் கொடுத்திருக்கிறது.
விஜய் சேதுபதியை விஜய்யின் தொண்டர்கள் விமர்சித்ததில் பிரச்னை இல்லை. அந்த விமர்சனத்தின் தன்மைதான் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. எங்களின் தலைவரை மறைமுகமாக சாடும் வகையில் விஜய் சேதுபதி தவறான கருத்தை பகிர்கிறார். அவர் பகிர்ந்த கருத்துக்கு மாறாக உண்மை இருக்கிறது. அவர் பகிர்ந்த கருத்துக்கு மாற்றாக எங்களிடம் ஒரு கருத்து இருக்கிறது. இப்படியாக ஒரு கருத்துக்கும் வாதத்துக்குமான எதிர்வாதமாக இந்த விமர்சனங்கள் இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால், இங்கே தவெக தொண்டர்களென இணையத்தில் சுற்றும் ஐடிக்கள் ஒரு ஆபத்தான பாதையை கையிலெடுத்தனர்.

அதாவது, இப்படியொரு கருத்தை சொல்ல நீ யார்? எங்களின் தலைவனை நோக்கி எதிர்க்கருத்தை முன் வைக்குமளவுக்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா? என ஆன்லைன் குண்டர்களை போல வசைமொழிகளில் ரவுடியிசம் செய்திருக்கின்றனர். மேலும் சிலர், `தலைவா, இவர் படத்துக்கு ஒரு செக் வச்சி வுடுங்க’னு பதிவிடுறாங்க.
ஜனநாயகத்தின் அடிப்படையே வாதங்களும் எதிர்வாதங்களும் பிணைந்தே இருப்பதுதான். ஒருவரை நோக்கி எந்த விமர்சனத்தையும் வைக்கக்கூடாது, எந்த விரும்பத்தகாத கருத்தையும் வைக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கே எதிரானது. துரதிஷ்டவசமாக இணையப் பரவலுக்கு பிறகு சமூகவலைதள உலகில் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் கூலிப்படைகளாக செயல்படும் ஐ.டி.விங்குகள், தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை பேசும் நபர்களின் மீது எந்த ஈவு இரக்கமோ கண்ணியமோ அறமோ இல்லாத வகையில் தாக்குதலை தொடுக்கின்றனர்.
எதிர்க்குரல்களை தடயமே இல்லாமல் அமைதிப்படுத்த நினைக்கின்றனர். எதிர்ப்பாளர்களின் வாயை திறக்க முடியாத அளவுக்கு வசைமொழி சங்கிலிகளால் முடக்குகின்றனர். இதற்கு கட்சிப் பேதமே இல்லை.
2014 இல் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இந்தியா முழுவதும் பாஜக இதைத்தான் செய்து வருகிறது. பாஜக ஐ.டி.விங்கின் ட்ரோல் பேக்டரியால் பாதிக்கப்பட்ட எத்தனையோ பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் தங்களின் கோரமான அனுபவங்களை நிறையவே பதிவு செய்திருக்கின்றனர்.
இப்படியான இணையக் கூலிப்படைகள் கையில் எடுக்கும் இன்னொரு மிக முக்கியமான ஆயுதம் குணாதிசயக் குலைப்பு மற்றும் முத்திரை குத்தும் அரசியலே. பாஜகவை நோக்கி கேள்வி கேட்டால் முதலில் கேள்வி கேட்பவரின் கேரக்டரை முதலில் குலைக்க முயல்வார்கள்.
பாஜக எதிராக பேசுபவரை தேசத்துக்கு எதிரானவராகவும் தேசப்பற்று அற்றவராகவும் சித்தரிப்பார்கள். ஆண்டி இந்தியன், அர்பன் நக்சல் என இந்த தாக்குதல்களுக்கு எல்லையே கிடையாது. அதுவும் விமர்சிப்பவர் சிறுபான்மையினராக இருந்தால் அவர்களின் வேலை மிக எளிதாகிவிடும்.
பாஜக இந்தியா முழுவதும் செய்ததை கடந்த ஐந்தாண்டுகளில் திமுகவின் இணையக் கூலிப்படை தமிழகத்தில் செய்தது. அரசுக்கு எதிராக நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் யாரையும் விட்டு வைக்கமாட்டார்கள். எங்கிருந்தாவது எதையாவது தோண்டி எடுத்து வந்து விமர்சிக்கும் நபருக்கு ‘சங்கி’ என முத்திரைக் குத்துவார்கள்.
திமுக மீது மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும் யாரும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என கூண்டில் ஏற்றுவார்கள். எந்த அடையாளத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு கூட்டம் கருத்துக் கூறுபவர் மீது பாயும். திமுக அரசின் தோல்விக்கு நியாயமான விமர்சனங்களுக்கு கூட காது கொடுக்காமல், தமிழகம் சொர்க்கப்புரியாக மாறிவிட்டது என்கிற மாயப்பிம்பத்தை தங்களது இணைய கூலிப்படைகள் மூலம் உண்டாக்கியதும் முக்கிய காரணம். களத்தின் எண்ணம் வேறாக இருந்தது. மக்களின் தீர்ப்பு வேறாக இருந்தது.
‘மாற்றம்….மாற்றம்…’ எனக் கூவி ஆட்சிக்கு வந்த தவெகவின் ஆட்சியிலும் இணைய படைகளின் அட்டூழியம் தொடர்வதுதான் பெரும் சோகம். விஜய் சேதுபதி போன்ற பிரபலமான அவருக்கென ரசிகர் வட்டமும் செல்வாக்கும் கொண்ட நபரையே இவர்களின் இணைய வழி தாக்குதலால் நிலை குலையச் செய்ய முடிகிறது.
மற்றக் கட்சிகளைப் போல இவர்களும் விமர்சிக்கும் விஜய் சேதுபதியின் மீது முத்திரை குத்துகிறார்கள். ‘விஜய் சேதுபதி ஒரு 200 ரூபாய் உ.பி, கொத்தடிமை…’ என அத்தனை வசை மொழிகள்.

விஜய் சேதுபதி திமுகக்காரராகவே இருந்தால்தான் என்ன? முன்வைக்கும் கருத்துக்கு எதிர்க்கருத்தை பேசுங்கள், உரையாடுங்கள். தவெகக்காரர்கள் மட்டும்தான் தவெக அரசை நோக்கி கேள்வி கேட்க வேண்டுமென்றால், இங்கே தவெகவை ஆதரித்து வாக்களித்தவர்களை விட எதிராக வாக்களித்தவர்கள்தான் அதிகம்.
தவெகக்காரர்கள் மட்டும்தான் தவெக அரசை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டுமென்பது ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பே இல்லாமல் செய்துவிடும். கேள்வி கேட்கும் நபர் யார் இவரின் பின்னணி என்னவென்று முத்திரை குத்துவதற்கு ஏற்ற பாய்ண்டுகள் கிடைக்கும் வரை அகழ்வாராய்ச்சி செய்வதை விட்டு, கேள்விகளுக்கு உரிய பதிலையும் வாதத்துக்கு உரிய எதிர்வாதத்தையும் வைப்பது எளிதான வேலையே. ஆனால், வெகுஜன அரசியல் கட்சிகளின் இணையக் கூலிப்படைகளுக்கு அந்த ஜனநாயகத்தன்மை கற்றுக்கொடுக்கப்படவே இல்லை.
இணையத்தில் விமர்சிக்கும் மக்களின் வாயை அடைக்கலாம். குரல்வளையை நெரிக்கலாம். ஆனால், களத்தில் எப்போதும் அதை செய்ய முடியாது. எதிர்க்குரல்கள் அடக்கப்பட அடக்கப்பட அந்தக் குரல்களுக்கு ஆதரவாக மக்களின் எண்ணமும் கருத்தாக்கமும் திரண்டு நிற்கும். வாய்ப்பு வரும்போது சரியான பதில் அடியை மக்கள் கொடுப்பார்கள்.
ஆக, தங்களின் இணைய கூலிப்படைகளுக்கு கடிவாளம் போட வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. தறிக்கெட்டு போக அனுமதித்தால் தக்கப் பதிலடியை மக்களே கொடுப்பர் என்பதே காலம் நமக்கு சொல்லி வரும் பாடம்.!
`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
September 15, 2026
சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' – ஜவஹர் அலி | களம் 02
September 15, 2026
“டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ – முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த்
September 15, 2026
`ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக' – முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார்
September 15, 2026
"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி
September 15, 2026
இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" – இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்
September 15, 2026
ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? பதறிப்போய் Phone போட்ட தோழர்..!
September 15, 2026
Unions urge ministers to soften planned changes to immigration rules
September 15, 2026
Unions warn against 'out of control' political spending
September 15, 2026
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. தமிழில் முழங்க வேண்டும்.. வா.கெளதமன் ஆவேசம்!
September 15, 2026
Balaclava ban aims to address 'substantial' problems
September 15, 2026
`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
September 15, 2026