சென்னையின் பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டான ஏ.ஆர்.எஸ். கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சட்ட அறிவிப்பு பலகை சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

‘இந்த நிலம் விற்பனைக்கல்ல, தவிர இந்த நிலம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ளன’ என்பதுதான் அந்த அறிவிப்பு பலகையில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள்.

ஆண்டு முழுக்க சினிமா, டிவி சிரியல்கள் பலவற்றின் ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும் இந்த இடம் குறித்து சினிமா சீனியர் நடிகர் ஒருவரிடம் பேசினோம்.

”சென்னையில் வடபழனி டு போரூர் செல்லும் வழியில் வளசரவாக்கத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஸ்டூடியோ, திரைப்பட நடிகைகள் அம்பிகா, ராதா குடும்பத்துக்குச் சொந்தமானது.

அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாய் சரசம்மா ஆகிய மூவரையும் குறிக்கும் விதத்தில் தான் ஏ.ஆர்.எஸ் என பெயரிடப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது இந்த ஸ்டூடியோவைத் திறந்து வைத்தார்.

அப்போது முதல் ஏராளாமான படங்கள் மற்றும் டிவி சீரியல்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாலேயே அவர் இவர்களுக்குத் தானமாக தந்தார் எனக் கிளம்பிய புரளிகளும் இப்போது வரை நின்றபாடில்லை.

ambika

ஷூட்டிங்கிற்குத் தேவையான எல்லா வசதிகளூம் இங்கு இருப்பதால் வருடம் முழுக்க ஷூட்டிங் நடந்து கொன்டே இருக்கும்.

சென்னையின் சில பிரபல ஸ்டூடியோக்கள் காலப் போக்கில் மூடப்பட்டு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்களாக மாற்றம் பெற்ற போதும் ஏ.ஆர். எஸ் இன்று வரை இயங்கிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சரசம்மா காலமானார். சரசம்மாவுக்கு அம்பிகா, ராதா தவிர மல்லிகா என்ற இன்னொரு மகளும் மல்லிகார்ஜுன‌ன், சுரேஷ் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.

தாயாரின் மறைவுக்குப் பிறகு சொத்துகளைப் பாகம் பிரிப்பதில் தகராறா தெரியவில்லை, தற்போது இப்படியொரு அறிவிப்பு அந்த வளாகத்திலிருக்கிறது. என்ன பிரச்னைனாலும் சுமூகமா தீர்க்கப்பட்டு அந்த இடத்துல‌ தொடர்ந்து சினிமா ஷூட்டிங் நடக்கணும்கிறதுதான் சினிமாக்காரர்களின் ஆசை” என்றார் அவர்.

சட்டபூர்வ அறிவிப்புமே மல்லிகார்ஜுனன் பெயரில்தான் தரப்பட்டுள்ளது.

ACTRESS RADHA

தவிர ஏ.ஆர்.எஸ். கார்டன் என்ற பெயருக்குப் பக்கத்திலேயே ஆர்.ஆர் கார்டன் என்கிற பெயரும் இருக்கிறது. (ஆர்.ஆர் கார்டன் என்ற பெயர் ராதா மற்றும் அவரது கணவர் ராஜசேகர் நாயர் என்பதைக் குறிக்க என்கிறார்கள்)

இந்த சட்ட அறிவிப்பைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை அம்பிகாவைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டோம்,

legar notice

”எனக்கே நிறையப் பேர் ஸ்டூடியோவை விக்கப் போறீங்களாமே, என்ன விலை’னு கேட்டாங்க. யார் கிளப்பி விட்ட வதந்தினு தெரியல. இப்படி நிறையத் தேவையில்லாத விசாரிப்புகள் வந்ததாலதான் அப்படியொரு அறிவிப்பு தேவையா இருக்கு. அதனால வச்சிருக்காங்க’ என்றவரிடம்,

‘ஸ்டூடியோவின் பெயர் மாற்றப்பட்டிருப்பது உண்மையா’ எனவும் கேட்டோம்.

ஆர்.ஆர் கார்டன்னு வச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். ஆனா ஏ.ஆர்.எஸ். கார்டங்கிறதுதா எல்லாருக்கும் தெரிஞ்ச பேரு’ என முடித்துக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் வேறொரு சர்ச்சை இந்த ஸ்டூடியோவை வைத்துக் கிளம்பியது நினைவிருக்கலாம். தயாரிப்பாளர் ஒருவரிடம் வாங்கிய கடனை அம்பிகா, ராதாவின் சகோதரர் தர இழுத்தடித்ததால் அந்த தயாரிப்பாளர் தனது செல்வாக்கை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியில் பயன்படுத்த, அதன் விளைவாக சில நாட்கள் அங்கு ஷூட்டிங் தடை பட்டதாகச் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.!

See all 182 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *