காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நிலவிய இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து சட்டசபையில் அறிவித்தது.

முந்தைய ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதே வேளையில் அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்திருந்தது.

சிப்காட்

இதற்கிடையில், பரந்தூர் அருகே இருக்கும் மதுரமங்கலம் ‘ஏ’ கிராமத்தில் புதிய சிப்காட் (SIPCOT) மின்னணு மற்றும் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தித் தொழிற்பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் இந்த தொழிற்பூங்கா உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, இங்கு உற்பத்தி மட்டுமல்லாமல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, மதுரமங்கலம் ‘ஏ’ கிராமத்தில் 103 சர்வே எண்களுக்கு உட்பட்ட சுமார் 8.3820 ஹெக்டேர் ‘புஞ்சை’ நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997-ன் கீழ் நில நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார். அதில் தனிநபர் மனைகள், காலி நிலங்கள், ஏ.வி.ஆர். புரோப்பர்ட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிலங்கள், தேவாலய அறக்கட்டளை நிலம் மற்றும் பஞ்சாயத்து இடங்கள் அடங்கும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலங்களில் அமைந்துள்ள கிளினிக், கடைகள், ஆழ்துளைக் கிணறுகள், கம்பவுண்ட் சுவர்கள் மற்றும் வேம்பு, தென்னை, பனை, மா போன்ற மரங்களுக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகையைச் சிப்காட் மேலாண்மை இயக்குநர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக் கையகப்படுத்துதல் தொடர்பான வரைபடங்கள் மற்றும் விவரங்கள் காஞ்சிபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேலை நாட்களில் நேரில் சென்று ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டிருக்கிறது.

See all 782 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *