தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று உரையாற்றிய முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷனில் பதிவான குற்றச்சாட்டுகளை விவரித்தார். அதில் மறைந்த முதல்வர் கலைஞர், திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் பற்றிய குற்றச்சாட்டுகளும் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் தன் எக்ஸ் பக்கத்தில் “ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு? அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா? உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் பற்றிப் பேசலாமா?

இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-ல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?

முரசொலி மாறன், கருணாநிதி

அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது…

இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்! தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!”

See all 774 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *